ஓவியர் மணிவேல்
ஸ்ரீ மீனாட்சியம்மன், மதுரை
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
கடம்ப வனமான இந்தத் தலத்தில், ராஜ சியாமளையான அம்பிகை பொன்னாலான தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
மீனாட்சி என்று சொன்னதும், நமது நினைவிற்கு வரும் இரண்டு முக்கிய விஷயங்கள் அவள் உடுத்தியிருக்கும் பச்சைப் பட்டும், கையிலே தாங்கியிருக்கும் கிளியும்தான். ஆனால், மூலவர் திருமேனியில் அன்னை தன் திருக்கரத்தில் நீலோத்பவ மலரை மட்டுமே ஏந்தியிருப்பாள். கிளி ஆபரணமாகச் செய்யப்பட்டு தனியே அணிவிக்கப்படும்.
இந்தச் செய்தியை, நம்முடைய ஓவியர் தவிர வேறு யாரும் காட்டியிருப்பதாக அறியமுடியவில்லை. இந்த ஓவியத்தில் தனது வலது கரத்தில் மலரை மட்டும் ஏந்தி இருக்க, இரத்தினங்கள் பதித்த ஆபரணமாக கிளி தனியே பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
பச்சைப் பட்டு உடுத்தி, பாண்டியருக்கே உரிய முத்துகளால் ஆன மாம்பழ கொண்டை அணிந்தும், நாயக மன்னர்களால் செய்துவைக்கப்பட்ட தங்கத்தால் ஆன ஆபரணங்கள் அணிந்தும் காட்சி தருகிறாள். அதிலும் இந்த ஓவியத்தில் அன்னையின் திருவடிக்கு அருகே, அவள் அணிந்திருக்கும் இரண்டு தலைகள் கொண்ட புராண பறவையான கண்டபேருண்ட பறவையின் வடிவிலான பதக்கம் காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவரும்.
குங்குமத் திலகமிட்டு, கருணைபுரியும் முகத்தில் மூக்குத்தி புல்லாக்கு அணிந்து, மார்பிலே மிளிரும் வைரத்தாலியோடு நித்திய சுமங்கலியான அம்பிகையை நேரில் சென்றாலும், இத்தனை நுணுக்கங்களோடு நாம் தரிசிக்க முடியாது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
